மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் தனியார் கட்டிடத்தில் பாஜ தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அந்த அலுவலகத்தில் இருந்த பாஜ நகர நிர்வாகிக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் ஒருவரை சேர்களை தூக்கி வீசி தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, பாஜ கூட்டணியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். தினந்தோறும் குடியாத்தம் நகரப் பகுதிகளில் வாக்கு சேகரிக்க, தாமரைச் சின்னத்தை பொதுமக்களிடம் பரப்பவும் மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆட்களை சேர்க்க நகர பாஜ நிர்வாகியிடம் பணம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை பாஜ நிர்வாகிகளுக்கு சரியாகப் பிரித்து கொடுக்கவில்லையாம். இதனால் தேர்தல் அலுவலகத்தில் இருந்த நிர்வாகியிடம் இதுகுறித்து மற்ற நிர்வாகிகள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆத்திரமடைந்து ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். அலுவலகத்தில் இருந்த சேர்களை ஒருவரை ஒருவர் தூக்கி வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மற்றும் பாஜக தலைமையும் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
* உருது மொழியில் பேசி வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க வேட்பாளர்கள் கையாளும் யுக்திகளே இப்போது பேசு பொருளாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகேயுள்ளது முஸ்லிம்பூர் கிராமம். இங்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியுடன் அங்கு சென்று வாக்கு சேகரித்தார் அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ். அப்போது அவர், ‘‘எனக்காக ஓட்டு கேட்டு அண்ணன் முனுசாமி வந்துள்ளார். நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று உருது மொழியில் சரளமாக பேசி வாக்கு கேட்டார். இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகள் தெரியும். பலர் உருது மொழியையும் சரளமாக பேசுவார்கள். இந்தவகையில் வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் உருது மொழியில் பேசி ஓட்டு கேட்டார்’’ என்றனர்.
The post பணம் பிரிப்பதில் தகராறு தேர்தல் அலுவலகத்தில் பாஜ நிர்வாகிகள் டிஷ்யூம்.. டிஷ்யூம் appeared first on Dinakaran.